Wednesday, September 29, 2010

ஓ....மனமே!!!ஓ...மனமே!!!


ஒரு விஷயம் நம்ம ஆசைப்பட்டு கிடைக்கலன்னா அவ்ளோ வலிக்கும்.அது இயற்கை.நான் என்ன ஒரு optimistனு சொல்லிப்பேன்.எதுவந்தாலும் அதை சமாளிக்கனும்ன்னு சொல்வேன்.எனக்கு கொஞ்ச நாளா நெகடிவ் thoughts ஜாஸ்தியாயிடிச்சு.ஆனா அது என் சொந்த ஊருக்கு போறேன்னதும் பாஸிடிவ் எனெர்ஜியா மாறிடுச்சு.

இந்த சமயத்துல என் மனசுல தோணினதை எல்லாம் உங்ககிட்ட பகிர்ந்துக்கலாம்னுதான் இந்த பதிவு. (யப்பா....இன்னும் முன்னுரையே முடியலையா????)

நாம கேட்காமையே நமக்கு ஒரு நல்ல அம்மா,அப்பா,குடும்பம்,நண்பர்கள்னு எல்லாரையும் பாத்து பாத்து நமக்கு கொடுத்த கடவுளுக்கு நமக்கு ஒரு அமைதியான வாழ்க்கைய அமைச்சுத்தர தெரியாதா என்ன?அதுக்கு நாம முழுசா நம்பனும்.நம் வாழ்கை நல்லா இருக்கும்னு.ஒரு விஷயம் நமக்கு கிடைக்கலைன்னா அது நமக்கு தகுதியானது இல்லை,அதனால நமக்கு நாம எதிர்பார்த்த சந்தோசம் கிடைக்காதுன்னும் எடுத்துக்கலாம் (சீ சீ இந்த பழம் புளிக்கும்....).அது எதாவது பொருளோ,பணமோ,மனிதர்களோ எதற்கும் பொருத்தி பாக்கலாம்.

ஒரு வேலை நமக்கு கிடைக்கலன்னா இதைவிட பெரிய வாய்ப்பு நமக்காக waitingல இருக்குன்னு அர்த்தம்.இதே தான் மத்த விசயங்களுக்கும்.அதனால மனசு துவள கூடாது.சிலபேர் பணம் இருந்தா வாழ்கை சந்தோஷமா இருக்கும்னு நினைக்கலாம்.ஆனா பணம் அவங்களுக்கு நிம்மதியை கொடுக்குதா??????நிச்சயம் கிடையாது.அப்படி கிடைச்சா அவங்க ஏன் நிம்மதிக்காக சாமியார்களை(உண்மையான) தேடி போகணும்?
அதனால மனுஷனோட நிம்மதி எதுலயும் இல்ல.அவனுக்குள்ளேதான் இருக்கு.ஒரு விஷயத்துக்கு வருத்தப்பட தேவையான எனெர்ஜிதான் சந்தோஷப்படவும் தேவைப்படுது.கவலைப்படரதால எதுவும் மாறாது.பின்னே ஏன் நம்ம நிம்மதியை நாமே குலைச்சுக்கணும்?இருக்கறவரைக்கும் மத்தவங்களையும் சந்தோஷபடுத்தி நாமும் சந்தோஷமா வாழ்வோம்:):):)
வாழ்க்கை வாழ்வதற்கே!!!Don't worry!!!!Be happy!!!!Enjoy every moment of life!!!

Monday, September 27, 2010

பதிவுலகத்திற்கு தற்காலிக டாட்டா

நான் என் சொந்த ஊருக்கு செல்வதால் (அட அதிசயமா அங்கேயே வேலை கிடைச்சுடுச்சுங்க....ஹி..ஹி) பதிவுலகத்திர்க்கு தற்காலிகமா என்னோட டாட்டா.எல்லாரும் சந்தோஷமா இருங்க.Bye bye!

Wednesday, September 22, 2010

இயற்கையை ரசிக்க கத்துகிட்டேன்....வாழ்வையும் சேர்த்து!


அப்போ நான் 10 ஆம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன்.எங்களுக்கு பிரின்சிபால் அப்போல்லாம் இங்கிலீஷ் பாடம் சொல்லிகொடுக்க வாரம் ஒரு வகுப்பிற்கு(period) வருவார்கள்.இங்கிலிஷ்க்கு எங்களுக்கு வேற ஒரு ஆசிரியை இருந்தாங்க.இருந்தாலும் எங்க ப்ரின்சிபாலோட தனிப்பட்ட ஆர்வத்துல அவங்களே சில சமயம் பாடம் எடுப்பாங்க.பிரின்சிபால்ன்னு எந்த ஒரு கெடுபிடியோ,ஆர்ப்பாட்டமோ,ஆதிக்கமோ இல்லாத அற்புதமான மனுஷி.அவங்க கிளாஸ்க்கு வர்ற அந்த வகுப்புக்காவே காத்துகிட்டு இருப்போம். ஏன்னா பாடத்த பாடமா சொல்லாம கதை மாதிரி ரசிக்கும்படியா சொல்வாங்க.

அப்படி ஒரு நாள் அவங்க பாடம் நடத்தும்போது விடிகாலையைப்பத்தி பேச்சு வந்தது.அவங்க சொன்னாங்க (இங்கிலிஷ்லத்தான்) "நானும் பல வருஷமா விடியற்காலையிலே வானத்தை பாத்துகிட்டே இருக்கேன்.அது இருள்சூழ்ந்து இருக்கும்....ஆனா கண்ணிமைக்கிற நேரத்துல வெளுத்துபோயிடுது.அது எப்படின்னு யோசிப்பேன்.இன்னிக்குவரைக்கும் பதில் கிடைக்கல. இயற்கையோட அழகே அழகுதான்.இத இதுவரைக்கும் யாராவது கவனிச்சதுண்டா? "னு.அப்போதான் யோசிச்சேன்
பொழுது விடியர்துன்றது தினமும் நடக்குற ஒரு நிகழ்வு.ஆனா அதையும் ரசிச்சு கலைகண்ணோட பாக்கலாம்னு புரிஞ்சிக்கிட்டேன்.
அதுக்கப்புறம் ஒரு நாள் நிஜமாவே ஒரு காலை பொழுதில் உட்கார்ந்து பார்த்தேன்.ஆம் எல்லாமே ஒரு நொடியில் மாறுது.இருள் சூழ்ந்து இருக்கும் வானம் ஒளி படர்ந்து காட்சி கொடுக்குது.இதே போலத்தான் நம்ம வாழ்க்கைல வர்ற கஷ்டங்களும் அந்த இருளைப்போல இருந்த தடம் தெரியாம மறைஞ்சுடும்னு நம்ப ஆரம்பிச்சேன்.

இப்போ அவங்க எங்கே எப்படி இருக்காங்கனு தெரியாது.ஆனா எனக்கு வாழ்க்கைய ரசிக்க கத்துகொடுத்தவங்கள்ள அவங்களும் முக்கியமான ஒருத்தர்.

Tuesday, September 21, 2010

கவிதைகள்-II

போதை!

அன்பும்,
பாசமும்
ஒருவிதத்தில்
போதைதான்
அதை
இழக்கமுடியாமல்
மனம்
தள்ளாடுகிறதே!

பற்று!

பற்றற்று வாழ்
மரணத்திற்கு
பின் சொர்க்கம் செல்வாய்
என்கிறது
சாஸ்திரம்;
சொர்கலோக
வாழ்வை
நாடுவதே
ஒரு
பற்றல்லவா???!!!!

Friday, September 17, 2010

நான் ரசித்த பாடல் வரிகள்!!!

நான் ஒரு பாட்ட கேட்கறதுக்கு மியூசிக்,பிடிச்ச ஹீரோ நடிச்ச பாடல் இப்படி பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் அந்த பாடலோட வரிகள்.
அப்படி நான் ரசிச்ச சில பாடல் வரிகள்தான் இங்கே கொடுத்திருக்கேன்.

அட்டகாசம் படத்துல "தீபாவளி"ங்குற பாட்டுல எனக்கு பிடிச்ச வரிகள்:
"ஒரு நல்லவனா நீயும் வாழ்ந்திருந்தா ஊரே தோளில் ஏறி நிற்கும்,
ஒரு வல்லவனா நீயும் வாழ்ந்துவந்தா ஒரே தோளில் ஏற்றி வைக்கும்"
எப்போவும் தன்னம்பிக்கையும்,சாதிக்கணும்கிற எண்ணத்தையும் விதைக்கிற வரிகள்.

ரெட் படத்துல "கண்ணை கசக்கும்" பாட்டுல எனக்கு பிடிச்ச வரிகள்:
"
உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே;உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே".இந்த உலகம் இப்போ இருக்குற நிலைமைல நம்மள விழிப்பா இருக்கணும்னு சொல்ற வரிகள்.

காதல் வைரஸ் படத்துல "எந்தன் வாழ்வின்" பாட்டுல எனக்கு பிடிச்ச வரிகள்:
"
காதல் ஒன்றும் காயமல்ல காலபோக்கில் ஆறிபோக","என்னைவிட்டு போனது அமைதியன்றோ;நீயுமில்லா நானுமோர் அகதியன்றோ".ஆஹா காதலோட வழிய சொல்ற அருமையான வரிகள்.

சிகரம் படத்துல "அகரம் இப்ப" பாட்டுல எனக்கு பிடிச்ச வரிகள்:
"நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்கை உள்ளது".இந்த பாடல் முழுக்க தன்னம்பிக்கை சிந்தனைகள் இருந்தாலும் இந்த ரெண்டு வரி எனக்கு ரொம்ப பிடிக்கும்.



Thursday, September 16, 2010

விளம்பரமா காமெடியா?


இப்போ நான் சொல்லபோறது sharon plywoods விளம்பரத்தபத்திதான்.
ஒருத்தர் யானை தும்பிக்கையை தூக்கிப்பார்த்து அங்கிருந்து சில இடங்கள் எவ்ளோ தூரத்துல இருக்குனு துல்லியமா சொல்றாரு.அதுக்கு அவரிடம் வழிகேட்ட ரமேஷ் கண்ணாவும் எப்படியா யானையின் தும்பிக்கையை பார்த்து கரெக்டா சொல்றேன்னு கேட்டா தும்பிக்கையை தூக்கி அங்கே NH distance காட்ற போர்ட காட்றாரு."சின்ன விஷயத்துக்கு பெரிசா யோசிக்காதிங்க"ன்னு வாசகம்.நல்லா இருந்துச்சு.

இது கொஞ்ச நாள் முன்னாடி எதோ ஒரு படத்துல காமெடில வந்தாப்ல இருக்கு.
ஒரு கழுதை வாலை தூக்கி மணி கரெக்டா சொல்வாரு ஒருத்தர்(யார்னு ஞாபகம் இல்ல).அவரை பெரிய புத்திசாலியா நினைச்சு பாராட்டிற்றுக்கும்போது அந்த வாலை தூக்கி அங்கிருக்கும் மணிக்கூண்டை காட்டுவார்.அந்த காமெடிதான் இப்போ இந்த விளம்பரம் பாத்தா நினைவுக்கு வருது.

கவிதைகள்!

அன்னை!

உருவற்று கிடந்த எனக்கு
உடல் கொடுத்தவள்,
உணவற்று தவித்த எனக்கு
தன் உதிரத்தையே பாலாக்கியவள்,
கல்வியறிவற்று திரிந்த எனக்கு
பள்ளியனுப்பி பாடம் புகட்டியவள்,
என் வளமான வாழ்வுக்கு
அடித்தளம் அமைத்தவள்
இன்று அவள்மட்டும்
தனிமரமாய்
எங்கள் சொந்த கிராமத்தில்,
நானோ நாகரிகம்
தந்த சுகவாழ்வுடன்
அயல்நாட்டில்!!!!

மனம்!

மனித மனம்
ஒரு
குரங்காம்,
யார் கூறியது?
இதோ
என் மனம்
வேறு யாரிடமும்
தாவாமல்
அவளை மட்டுமே
வட்டமிடுகிறதே!

சிறைப்பறவை!

சுதந்திர வானில்
சுற்றிதிரியும்போது
என்றேனும் ஒரு நாள்
வேடனிடம்
அடிபட்டு இறப்பதைவிட
என் ஆயுட்காலம் முழுவதும்
உன் நெஞ்சக்கூட்டில்
சிறைப்பறவையாய்
வாழ்வதே மேல் அல்லவா???!!!

கவிஞன்!

அவன்
ஒரு
சிறந்த கவிஞனாம்
நான் அதை ஏற்கமாட்டேன்
அவன் இதுவரை
உன் விழிகளை
வர்ணித்ததே இல்லையே???!!!

Wednesday, September 15, 2010

என்னமா யோசிக்கிறாங்க....!!

இது சமீபத்துல பார்த்து ரசிச்ச 2 விளம்பரங்கள பத்தின பதிவு.
1.Idea மொபைல்:நான் சொல்ற விளம்பரம் லேட்டஸ்ட்டா அவங்க கொண்டு வந்தது."அபிஷேக் பச்சன் வாய் பேச முடியாதவர்.ஒரு டீ கடையிலே பல பேர் வேலை விஷயமா மொழிதெரியாத இடத்துக்கு போறதா காட்டிட்டு அவங்க மொழிப்பிரச்சினைக்கு அபிஷேக் தீர்வு சொல்றா மாதிரி இருக்கு.அவர் போன்லயே எல்லாரோட மொழிப்பிரச்சனையும் தீர்த்து "Idea"விலே குறைந்த ரேட்ன்னு சொல்லாம சொல்றார்".சாலமன் பாப்பையா ஸ்டைல்லே சொன்னா அருமைய்யா.எனக்கு அந்த விளம்பரத்தோட புகைப்படம் கிடைக்காததால எதோ எனக்கு தெரிஞ்ச அளவு explain பண்ணி இருக்கேன்.
2.டைரி மில்க்:


ஒரு நடுத்தர வயது வாலிபன் அவர் மனைவிக்கு ஜீன்ஸ் போட்டு அழகு பார்க்க நினைக்குறாரு.ஆனா அந்தம்மா கூச்சம் காரணமா வெளிய வரமாட்டேன்குறாங்க.டைரி மில்க் சாப்பிட்டதும் ஒரு இனிய ஆரம்பமா அவங்க தயக்கத்தைவிட்டு தன கணவனின் ஆசைக்காக வெளியே வராங்க.அவங்களை வெளியிலே சந்தோஷமா ஒரு வாலிபன் வரவேற்கும்படி நன்றாக உள்ளது.

கவிதை!

காதலித்தால் கவிஞனாகிவிடலாமாம்
யாரோ சொன்னார்கள்;
ஏன் நட்பின் பிரிவிலும்
கவிதை எழுதலாம்;
நம்பவில்லையா?
இதோ நாள்தோறும்
என் டைரியில்
உன் பெயரை மட்டுமே
கிறுக்கி தள்ளுகிரேனே!!!

என்னவளே!

என் புன்னகைதான்
என்னிடத்தில்
உனக்கு பிடிக்கும்
என நன்றாக தெரியும்
எனக்கு;
அதனால்தானே
அதைமட்டும்
என்னிடமிருந்து
கவர்ந்து சென்றாய்???!!!!

Monday, September 13, 2010

ஸ்வர்ணலதாவிற்கு என் மனமார்ந்த அஞ்சலி!!!


"எவனோ ஒருவன்" பாடலில் என் உள்ளம் கரைத்த குரலழகி ஸ்வர்ணலதா இன்று நம்முடன் இல்லை.இளைய வயது பிரமுகர்களெல்லாம் இறைவனடி சேறும் காலம் போலும்.முதலில் நடிகர் முரளி(46),இப்போது இவர்(37).இவர் 1989ம் ஆண்டு திரையுலகத்திர்க்கு வந்தார்.திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்த இவருக்கு 37 வயது.நுரையீரல் பாதிப்பால் நேற்று காலை 10 மணிக்கு இயற்கை எய்தினார்.

இந்த தலைசிறந்த பாடகி தன் மந்திர குரலால் பலரை கட்டி போட்டுள்ளார் என்பது உண்மை.எத்தனை பாடல்கள்."குயில் பாடு","போறாளே பொன்னுதாய்","பூங்காற்றிலே",...இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.தேசிய விருது வாங்கியவர்.

இவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.என் மனமார்ந்த அஞ்சலிகள்!!!

Wednesday, September 8, 2010

நன்றி!!!

இது என் 25வது பதிவு.(அவனவன் சத்தமே இல்லாம 100 200 னு போய்கிட்ருக்கான் 25கே இப்படியா?)ஹி ஹி:):)

இதுவரை எனக்கு பின்னூட்டமளித்து ஊக்கமளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!என் முதல் Follower ஆன "அப்பாவி தங்கமணி" அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி.ஏனெனில் இனி பின்னூட்டமும் பின்தொடர்பவர்களும் இல்லையெனில் நான் எழுதுவதை(ப்ளாக்) நிறுத்திவிடலாம் என்றிருந்தேன்.(நீங்கல்லாம் தப்பிச்சிருப்பீங்க...ஹ்ம்ம் என்ன பண்றது?)எனக்கும் (என் எழுத்துக்கு) மதிப்பு கொடுத்து என்னையும் follow பண்ணும் 5 நல்ல உள்ளங்களுக்கும்(அப்பாவி தங்கமணி,L.K, S.K,வித்யா,மின்மினி.காம்), தமிளிஷ்(இன்ட்லி)-இல் follow பண்ணும் இருவருக்கும்(RDX,YUvaetff) நன்றி ஹை!என் ப்ளாகை படித்து பின்னூடமிடாதவர்களுக்கும் நன்றி(இனிமேலாவது ஏதாவது பின்னூட்டம் போடுங்கப்பா,இல்லன்ன தமிழ்மணம்,இன்ட்லி இப்படி எதிலயாவது வோட்ட குத்துங்க).

நடிகர் முரளிக்கு அஞ்சலி!!!:(:(


முரளி....பூவிலங்கு திரைப்படம் மூலம் திரைஉலகிர்க்கு வந்து வெற்றி நாயகனாய் வலம் வந்தவர்.46 வயதாகும் இவர் இன்று காலை மாரடைப்பால் இயற்கை எய்தினார்.இவர் வெற்றிக்கொடிகட்டு,இதயம்,பகல் நிலவு போன்ற பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.இவர் சிவாஜி,பிரபு,பார்த்திபன்,சூர்யா,சரத்குமார்,மம்மூட்டி உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.இவரது மகன் அதர்வா நடித்த முதல் படமான "பானா காத்தாடி" இவருக்கு கடைசி படமாக அமைந்தது வருத்ததிற்குரியது.இவர் தந்தை கன்னடர்,தாய் தமிழ்.இவர் திருமணம் காதல் திருமணம்.இவருக்கு இரண்டு மகன்கள்,ஒரு மகள்.
சமீபத்தில் மகன் அதர்வாவுடன் "காபி வித் அனு" நிகழ்ச்சியில் பங்கேற்று மிக சிறப்பாக உரையாடியது இன்னும் கண்களில் உள்ளது.இந்த நிகழ்ச்சிக்குப்பின் என்னை வெகுவாக கவர்ந்தார்.


இந்த மிகசிறந்த நடிகருக்கு என் மனமார்ந்த அஞ்சலி!!!:(:(:(

Wednesday, September 1, 2010

ஸ்ரீ பாதம்!!!


கிருஷ்ண ஜெயந்தின்னு சொன்னாலே நம்ம ஞாபகத்துக்கு வர்றது பூஜை செய்றது,பட்சணம் பண்ணறது,முக்கியமா பாதம் போடுறதுதான்.இந்த பாதம் பிறந்த குட்டி கிருஷ்ணர்துன்னு பலர் நினைச்சிக்கிட்டு இருக்காங்க.(ஏன் முதல்ல நானும் அப்படிதான் நினைச்சேன்). சிலர் தங்கள் வீட்டிலிருக்கும் குழந்தைகளோட பாதங்கள மாவுல நனைச்சு பாதம் போடுறதை பாத்திருக்கேன்.ஆனால் அது அப்படி இல்லை.

திருமால் இருக்கும் எல்லா இடத்திலையும் மகாலட்சுமியும் குடிஇருப்பா.அந்த பாதமும் கிருஷ்ணரோட பாதம் இல்ல, அதற்கு பேர் "ஸ்ரீ பாதம்".மகாலக்ஷ்மியோட கால் தடம்.ஐஸ்வர்யத்தோட முகவரி.
இந்த தகவலோட இந்த வருஷ "கிருஷ்ண ஜெயந்திய" கொண்டாடுங்க.

டிஸ்கி:இந்த தகவல் "ரேவதி சங்கரன்" அவர்கள் "சூப்பர் மாம்" நிகழ்ச்சிக்காக விஜய் டிவில சொன்னது இது.தெரியாதவங்களுக்கு பயனுள்ளதா இருக்குமேன்னுதான் இந்த பதிவு.

Tuesday, August 31, 2010

ஏனடி??!!!

என் வானமென்று நினைத்தேன் உன்னை
வானவில்லாய் மறைந்தாய்,
என் மழைமேகமென நினைத்தேன் உன்னை
வெறும் கானல் நீராய் கரைந்தாய்,
என் உயிரே நீதான் என நினைத்தேன்
என் வாழ்வையே வெறுமையாக்கி சென்றாய்;

Monday, August 30, 2010

நறுக்குன்னு ஒரு கேள்வி?!!!

அவள்:அந்த ஆள...என்ன நினைச்சிக்கிட்டு இருக்கான்?பொம்பளைன்னா அவ்வளவு இளக்காரமா?அவன்தான் டைவார்ஸ் கொடுப்பானா?நானும் கையெழுத்து போடுறேன்.
அவள் அம்மா:எத செஞ்சாலும் கொஞ்சம் யோசிச்சு செய்மா.
அவள்:ஏம்மா! அவனுக்கு அவ்ளோ கொழுப்பு இருந்தா எனக்கு எவ்ளோ இருக்கும்?
நானும் மாசம் 30000 ரூபாய் சம்பாதிக்கிறேன்மா.நான் ஏன் அடங்கிபோகணும்?எனக்கென்ன தலை எழுத்தா?என்ன வேலைக்காரிமாதிரி நடத்துனா...அதன் கோச்சுகிட்டு வந்துட்டேன்.இப்போ வக்கீல் நோடீஸ் அனுப்பிசிருக்கான்.
அவள் அம்மா:இல்லம்மா இதெல்லாம் பேச நல்ல இருக்கும்.வாழ்க்கைக்கு ஒத்துவருமா?
அவள்:நீ சும்மா இரும்மா எனக்கு தெரியும்.நான் பாத்துகறேன் அந்தாள கோர்ட்ல..



அவன்
:டேய், அவளுக்கு திமிர பாத்தியாடா?எல்லாம் சம்பாதிக்குற திமிரு.நாந்தான் கோவத்துல டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிச்சுட்டேன்.அவளாவது மன்னிச்சுடுங்க நாம சேர்ந்து வாழலாம்னு சொல்றாளா பாரு!
அவன் friend:நீதான் விட்டுகொடுத்துபோயேன்.
அவன்:விட்ரா.நிலைமை தலைக்கு மேல போய்டுச்சு.இனிமே கோர்ட்தான் பதில் சொல்லணும்.



கோர்ட்ல அவங்களுக்கு அன்னிக்கு trial.
பலவிதமான வாதங்கள்.ரெண்டு பெரும் சளைக்காம ஒருத்தரபத்தி ஒருத்தர் குறை சொல்லிக்கிட்டு இருந்தாங்க.
இவங்கள செர்த்துவைக்கவே முடியாதுன்னு முடிவு பண்ண ஜட்ஜ் இவங்க ரெண்டுபேரையும் பார்த்து கேட்டார்.
"உங்களுக்குள் மனவேற்றுமை அதிகமா இருக்கு.நாங்க என்ன சொன்னாலும் கேட்குற நிலமையில நீங்க இல்ல.உங்களுக்கு இந்த கோர்ட் விவாகத்தில் இருந்து விடுதலை கொடுத்திரும் ஆனா எந்த கோர்ட்ல போய் உங்க 5 வயசு குழந்தைக்கு எந்த கோர்டுக்கு போய் விடுதலை வாங்கி கொடுப்பீங்க?????"
ரெண்டு பெரும் ஒருத்தருக்கொருத்தர் சலனமே இல்லாமல் பாத்துகிட்டாங்க!!

இந்த நிலைமை எந்த குழந்தைக்கும் வரக்கூடாது.கமல் படத்துல சொல்வாரு.
"husband அண்ட் wife பிரியலாம் ஆனா அம்மா அப்பா பிரியக்கூடாது!!"யோசிங்க மக்களே!!!
டிஸ்கி:இது 100% புனைவு (கற்பனைங்க) அதனாலே இப்படி எல்லாம் மரியாதை இல்லாம husbandஅ பேசுவாங்களான்னு கேட்டு தயவு செஞ்சு பின்னூட்டம் வேண்டாம்.கருத்த மட்டும் எடுத்துகோங்க ple.....ase.

நாம் இழந்துகொண்டிருக்கும் இன்பங்கள்!

இன்றைய சூழலில் நாம் வசதியாக,பகட்டாக வாழலாம்.சந்தோஷமாக,நிம்மதியாக வாழ்கிறோமா?மனசாட்சிக்கு விரோதமில்லாமல் பதிலளித்தால் இல்லை எனலாம்.
நாம் அன்று விளையாடிய விளையாட்டுக்கள் இன்று எத்தனை குழந்தைகளிடம் பரிச்சயமாயிருக்கும்?பல்லாங்குழி,நொண்டி(அல்லது பாண்டி),கல்லா மண்ணா, இன்னும் பல.

T.v., வீடியோ கேம்ஸ்-ல் ஆர்வம் காட்டும் குழந்தைகள் இன்று ஓடி விளையாடுவதில்லை.விளையாடுவதற்கு ஏற்ற சூழலும் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.அக்கம் பக்கத்தில் பேசுவதே கிடையாது.(காரணம்:நேரம் இல்லை).வீட்டிலும் தனிமை(பெற்றோரும் வேலைக்கு சென்றுவிடுகிறார்கள்,தாத்தா பாட்டியும் வீட்டில் கிடையாது).Battery உபயோகித்து விளையாடும் விளையாட்டு சாமான்கள் ஜாஸ்தியாகிவிட்டன.அதற்க்கும் அடிக்கடி Battery மாற்றவேண்டும்,அடிக்கடி விளையாடாதே என்று திட்டு வேறு.Battery பொம்மைகள் அல்லாது குழுவாக சேர்ந்து விளையாடும் விளையாட்டுக்கள் மலையேறிவிட்டன.இப்படியே போனால் நம் குழந்தைகளுக்கு மற்ற வகுப்புகளை போல பிறரோடு எப்படி பேசவேண்டுமென்றும்,பழகவேண்டுமென்றும் வகுப்பெடுக்க நேரிடும்.அதற்கு முன்னரே விழித்துகொள்வோம்.குழந்தைகளுக்கு பல ஆற்றல்கள் வரவைப்பதில் தவறில்லை ஆனால் அவை அவர்களின் உலகத்தையே திருடி அவர்களை அவர்களாக இல்லாமல் செய்வதை தடுக்க வேண்டும்.குழந்தைகள் தெய்வங்களின் மறு உருவம்.ஆகவே அவர்களின் குழந்தைபருவம் இனிதாய் அமைய ஓடி ஆடி விளையாட ஆயத்தபடுத்துவோம்!

Thursday, August 26, 2010

புண் பட்ட நெஞ்சம்!

இது நான் 7th std படிச்சுகிட்டு இருந்தப்போ நடந்தது.எனக்கு எங்க schoola ரொம்ப பிடிக்கும்.(யாருக்குதான் பிடிக்காது?னு நீங்க கேட்குறது புரியுது).எனக்கு moral values பத்தி சொல்லிகொடுத்தது எங்க ஸ்கூல்தான். நான் கொஞ்சம் நல்லாவே படிப்பேன்(நம்புங்கப்பா) கிட்டத்தட்ட ஒரு 3 ரேங்க்குள்ளே வந்துருவேன்.எனக்கு சுமாரா படிக்கிற ஒரு friend இருந்தா.அன்னிக்கு progress ரிப்போர்ட் கொடுத்துகிட்டு இருந்தாங்க.அந்த பொண்ணு நாலு subjectல அவுட்(அதான் fail).

நான் செகண்ட் ரேங்க் எடுத்திருந்தேன்.என் பக்கத்துல உட்கார்ந்திருந்தா அந்த பொண்ணு.மிஸ் அவல எழுப்பி "இவ உன் பிரெண்டா?"(என்ன காமிச்சு)னு கேட்டாங்க.அவளும் சாதாரணமா "ஆமா"னு சொன்னா.உடனே மிஸ் அவகிட்டே "வெளிய எங்கேயும் இப்படி சொல்லிடாதே அவளுக்குத்தான் அவமானம்"னு எல்லார் முன்னாடியும் சொல்லிட்டாங்க.எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.பின்ன என்னங்க moral valuesக்காக நான் பார்த்து பார்த்து வியந்த பள்ளியில் இப்படியொரு சம்பவம்.படிக்கலைன்றது ஒரு கொலை குத்தம் இல்லையே?அவங்கவங்களுக்கு என்ன திறமை இருக்கோ அதை போற்றலைன்னாலும் அவங்க இயலாமையை கிண்டல் பண்ண கூடாதுங்கறது என் எண்ணம்.அவங்க அவளை தனியா அழைச்சுட்டுபோய் சொல்லி புரியவச்சிருக்கலாம்.இப்படி எல்லோர் முன்னிலையிலும் அப்படியொரு வார்த்தை அவளை எவ்ளோ காயப்படுதியிருக்கும்னு நினைச்சாலே இப்போவும் கஷ்டமா இருக்கு.

அதனாலே பிள்ளைகளை கண்டிப்பதிலும் ஒரு பாசத்தோட ஒரு அணுகுமுறையை கடைபிடிக்கலாமே!நிச்சயம் அவங்க எதிர்காலம் வளமையானதா இருக்கும்!

Friday, July 30, 2010

அங்காடி தெரு-என் பார்வையில்!


அங்காடி தெரு...
வலையுலகமே கொண்டாடின படம்.நான் எப்போவோ பாத்துட்டேன்.ஆனா இவ்ளோ நல்ல படத்துக்கு detailஆ பதிவு போடணும்னு நினைச்சேன்.அதான் late. எனக்கு ரொம்ப பிடிச்சது.மகேஷ்-அஞ்சலி பொருத்தமான தேர்வு.மற்ற கதாபாத்திரங்களும் நடிக்கல வாழ்ந்திருக்காங்க.படம் ஆரம்பிக்கும்போதே 'கதைகளை பேசும்...' பாட்டு நம்மள படத்தோட ஒன்றவச்சுருக்கு.அவங்களோட அந்த வறுமையிலும் அவங்களோட விளையாட்டுக்கள்,வெங்கடேஷ அவங்க கலைக்கிற பாங்கு எல்லாமே சூப்பர்.வாழ்க்கை வாழ்வதற்கே!ஆனா அந்த accidentக்கு அப்புறம் அவங்களோட வாழ்க்கைமுறை எல்லாரோட பரிதாபத்தையும் அள்ளிட்டுபோய்டும்.வருமையினாலே ஒரு மனுஷன் என்னா பாடு படறான்னு தெளிவா காமிச்சுருக்கார் இயக்குனர் வசந்தபாலன் அவர்கள்.black பாண்டி as usual காமெடியில பின்றாரு.தமிழுக்கு ஒரு நல்ல காமெடியன் ரெடி.அவர் தமிழ் தாய் வாழ்த்த காதல் கவிதையா எழுதிகொடுக்கும்போது நம்மால சிரிப்பா நிச்சயம் அடக்கமுடியாது.congrats paandi!அந்த கண்ணு தெரியாத பெரியவர்,குள்ளமா இருக்கறவரு,அவர் மனைவியா வர்றவங்க,கனியோட ப்ரெண்டா வந்து செத்துபோற அந்த பொண்ணு,உழைச்சுதான் சாப்பிடுவேன் பிச்சை எடுக்கமாட்டேன்னு வைராக்யமா பப்ளிக் toiletஅ clean பண்ணி பிழைப்பு நடத்துபவர்னு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கியிருக்காரு மனுஷன்.வசந்தபாலன் சார்,உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
பாட்டு ஒண்ணொண்ணும் ஒரு விதம்.எல்லாமே சூப்பரப்பு.'அவள் அப்படி...' lyrics பின்னிட்டீங்க பாஸ்.'எங்கே போவேனோ...' குரல்லயே காதலோட வலிய பிரம்மாதமா வெளிப்படுதியிருக்காங்க (பென்னி,பாலாஜி,ஜானகி ஐயர்).
அந்த சின்ன பொண்ணு வயசுக்கு வந்ததும் ஆச்சாரம்னு சொல்லி நாய் கட்டிபோடுற இடத்துல தூங்க வைக்கிறது கொடுமை.இன்னும் பல இடங்கள்ள நடக்குது...மனசு வேதனையா இருக்கு.அந்த கோவில்ல அவங்கள அரவணைக்கிற பண்பு மனுஷத்தன்மைன்னு ஒண்ணு இன்னும் இந்த உலகத்துல இருக்குனு காட்டுது.சிநேகா சிநேகமா வந்துட்டு போறாங்க.கிளைமாக்ஸ் first class.அஞ்சலி அவங்கள மகேஷ் விட்டுட்டுபோயடுவார்னு நினைக்குறப்போ அவர் சொல்ற வசனமும் அதுக்கு ரெண்டுபேரும் கொடுக்குற முகபாவனையும் அய்யோ! புதுமுகமான்னு கேட்க தோணுதுங்க மகேஷ பாத்து.
மொத்தத்துல ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி ஏற்படுதுங்க.

அம்மா!!!

அம்மா...ரொம்ப அழகான வார்த்தைங்க.ஒவ்வொரு மனுஷனும் பிறந்தவுடன் சொல்ற முதல் வார்த்தை 'அம்மா'தாங்க.(என்ன நீ புதுசா சொல்ல போறன்னுதானே கேட்குறீங்க?கரெக்ட் நான் ஒன்னும் புதுசா சொல்ல போறதில்லை.)

கடவுள் பூமிக்கு வந்து ஒவ்வொருத்தரையும் பாத்துக்கமுடியாதுங்கரதால அவரோட பிரதிநிதிகளா அம்மான்ற உறவை நமக்கு கொடுத்திருக்கார்.நாத்திகவாதிகூட அம்மான்ற தெய்வத்துமேல அன்பும்,பக்தியும் கொண்டிருக்கறத நாம பாக்கலாம்.அப்படி என்ன 'அம்மா' முக்கியம்.நம்ம ஊர்ல அம்மா மேல இருக்குற ஒரு செண்டிமெண்ட் அப்பா மேல கிடையாது(அவர் எவ்ளோவோ செஞ்சாலும்).அதுக்கு காரணம் பத்து மாசம் அவங்க சுமந்து பெறுவதால் மட்டும் இல்லன்னு நான் நினைக்கிறேன்.ஒரு குழந்தை பிறந்தப்புறமும் அது நைட்ல தூங்காம அழும்போது முழிச்சிருந்து பாத்துகிட்டு
காலையிலயும் கணவனுக்கு உணவு கொடுத்து அவர ஆபீஸ் அனுப்பிவைப்பாங்க.பிள்ளைக்கு ஒத்துக்காதுன்னு அவங்களுக்கு பிடிச்ச உணவா இருந்தாலும் எடுத்துக்க மாட்டாங்க.அவங்களோட விஉப்பத்தைஎல்லாம் மறைச்சு பிள்ளைகளோட விருப்பத்தையே முன்னிருத்துவாங்க.அவங்களோட கண்டிப்புலையும் ஒரு பாசம் ஒளிஞ்சிருக்கறது நல்லா தெரியும்.இன்னும் எத்தனையோ....நான் சொல்லாம விட்டது.

நிஜம்மாவே 'அம்மா'ங்கறவங்க தெய்வம்தாங்க.இதையெல்லாம் ஏன் இப்போ சொல்றேன்னு நினைக்கறீங்களா?என்னோட முதல் பதிவு அம்மாவபத்தி இருக்கணும்னு ஆசைப்பட்டேன்.But வேற எதோ போட்டுட்டேன்.அதான் சரி இப்போ போடலாமேன்னு....

Thursday, July 29, 2010

நான் சமீபத்தில் ரசித்த திரைப்படங்கள்!

நான் ரொம்ப நாளைக்கப்புறம் படங்கள் பாத்தேன்.பாத்தா மட்டும் போடுமா?அதான் உங்களோட என் கருத்துக்கள(நல்லா கவனிங்க மக்களே என் கருத்துக்கள மட்டும்) பகிர்ந்துக்கலாம்னு வந்துட்டேன்.

1.மதராசபட்டினம்:
ags entertainment produce பண்ணி இருக்காங்க.ஆர்யா,எமி ஜாக்சன்,நாசர்,பாலா சிங்,மற்றும் பலர் நடிச்சுருக்காங்க.விஜய்(கிரீடம் புகழ்(???!!!)) டைரக்ட் பண்ணி இருக்காரு.G.V.பிரகாஷ் இசை.ஆஹா பழைய சென்னைய அழகா காமிச்சுருக்காக.எமி சூப்பரா நடிச்சுருக்காங்க.(தமிழ் heroines கவனத்திற்கு)ஆர்யா நல்லா குஸ்தி போடுறார்,ஆடி பாடுறார் ஆனா மனுஷனுக்கு feelingsஅ கண்ணுல காமிச்சு நடிக்க மாட்டேன்குறாரே!ஆர்யா படத்தோட ஒட்டாதமாதிரியே ஒரு feeling.அவங்க காதலும் அவ்ளோ ஆழமா இல்ல (or தெரியல)."ஆருயிரே" அர்த்தமுள்ள பாட்டு situation சரி இல்லைங்கே.அவங்க பிரிஞ்சதுக்குஅப்புறம் வச்சிருக்கலாம்.(ரயில்வே ஸ்டேஷன்ல பாக்குரத்துக்கு முன்னாடி வச்சிருக்கலாம்).anyway nice movie to be watched.

2.ஆனந்தபுரத்துவீடு:
நந்தா,சாயாசிங்,கிருஷ்ணா நடிச்சிருக்காங்க.நல்ல கதை.இந்த படத்த பாத்தப்புறம் அவங்கவங்க அப்பா அம்மா மேல இருக்குற பாசம் ஜாஸ்தி ஆகும்.நண்பனோட துரோகம், அத அழகா "நான் தனிய இருந்தப்போ ஒரே நண்பனா வந்தான் அவன விட்ருங்க"னு சொல்றது,மனைவியிடம் தன் கஷ்டத்தை மறைப்பதுனு direction சூப்பர்.நம்ம நாகாவாச்சே.(சின்னத்திரை மர்ம தேசம் புகழ்).ஆனாலும் திரைக்கதை கொஞ்சம் சுவாரஸ்யமா இருந்திருக்கலாம்னு தோணுது.படம்...ஒருமுறை குடும்பத்தோடு பார்க்கலாம் .

3.இரும்புகோட்டைமுரட்டுசிங்கம்:
லாரான்ஸ்,சந்த்யா,லக்ஷ்மி ராய்,பத்மப்ரிய,மௌலி,செந்தில், மனோரமா,...இன்னும் பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கு இந்த படத்துல.
கதைன்னு பாத்தா ஒன்னும் இல்லேங்கே.ஆனா சூப்பர் காமெடி.அதுவும் அந்த புதையல் எடுக்குற சீன்தான் படத்துக்கு highlight.ரொம்ப நல்லா இருக்குனு சொல்ல முடியாட்டியும் ஒருமுறை பாக்கலாம்.

4.ரெட்டைசுழி:
பாரதிராஜா,பாலச்சந்தர் என இரு பெரும் இயக்குநர்கள நடிகர்களாக்கி இருக்காங்க.இயக்குனர்களுக்கு நடிக்க கத்துகொடுக்கணுமா?நல்லாவே செஞ்சிருக்காங்க.பல இடங்கள்ள "பசங்க" படத்த ஞாபகப்படுத்தரத தடுக்க முடியல.ஆனாலும் விறுவிறுப்பா போகுது.பாலச்சந்தர் வில்லன் நடிப்புல கச்சிதம்.பாரதிராஜா அடக்கி வாசிச்சு பெற தட்டிட்டு போய்ட்றாரு.அஞ்சலி நல்ல நடிச்சுருக்காங்க.படம் நல்லாவே இருந்துச்சு.

5.பையா:
லிங்குசாமி படம்.கார்த்தி,தமன்னா நடிச்சுருக்காங்க.கார்லயே படம் போகுது.பாட்டெல்லாம் சூப்....பர்!"என் காதல் சொல்ல" என்னா வரிகள்?அட்ரா அட்ரா....சூப்பர்ங்கோ.ஆனா கிளைமாக்ஸ்ல தமன்னாவுக்கு கார்த்தி மேல காதல் வந்தே ஆகணும்னு திணிச்சாமாதிரி இருக்கு.வேற வழியே இல்லாம கார்த்திய லவ் பண்றாமாதிரி காமிச்சது நல்லா இல்லைங்கோ!படம் ஓகே...சூப்பர்னெல்லாம் சொல்ல முடியாது.

ஏ..பாப்பா நீ கொஞ்சம் தள்ளு....

தலைப்பை பார்த்துட்டு யாரும் தப்பா நினைக்க வேணாம்.நான் 8th std படிக்கும்போது நடந்த சுவாரஸ்யமான ஒரு சம்பவத்தைபத்தி இங்கே எழுதபோறேன்.

எங்க ஸ்கூல் எங்க வீட்லருந்து ஒரு 10 நிமிஷம்தான்.அதனால நான் வீட்டுக்கு என் friendsஓடதான் daily போவேன்,வருவேன்.எங்க ஸ்கூல் இருக்கறது ஒன்னும் பெரிய ரோடெல்லாம் இல்லை.ஆனாலும் பெரிய வண்டிங்க போகும்.ஆனா இந்த பீக் ஹவர்ஸ்ல அந்த பக்கம் போறது ரொம்பவே கஷ்டம்.

நானும் என் பிரெண்ட்சும் ஒரு நாள் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தோம்.நாங்க ஓரமாதான் நடந்து போனோம்.அப்போ எங்க பின்னாலே வந்த பைக்ல ரெண்டு வாலிபர்கள் இருந்தாங்க.அப்போதான் விஜயோட "பத்ரி" படம் ரிலீஸ் ஆகி "ஏ..பாப்பா" அப்படின்ற பாட்டு ரொம்ப famous ஆச்சு.அதுல ஒருத்தன் எங்க ஃப்ரெண்ட பாத்து "ஏ..பாப்பா நீ கொஞ்சம் தள்ளு"னு பாடினான்.அப்போ கோவம் வந்தாலும் அப்புறம் நினைச்சு பாக்கும்போது அவனோட timing sense நல்லா இருந்ததுன்னு தோணிச்சு.பிறகு அவள எங்க ரோட்ல பார்த்தாலும் இதே பாட்ட பாடி கிண்டல் பண்றதே ஒரு வேலையா வச்சிருந்தோம்....

Thursday, July 22, 2010

என்னவள்....அவளா???!!!

ஒரு நாள் காலை வேளையில் அலுவலகம் செல்ல பேருந்திற்காக நின்று கொண்டிருந்தேன்.தூரத்தில் அவள் வருவது கண்டேன்.'அவளா?அவள்தான?எனக்குள் ஏகப்பட்ட சந்தேகம்.அருகில் வரட்டும் பார்க்கலாம்'.அவள்...என் மனதில் தென்றலென வந்து புயலென மாறி என் வாழ்வையே புரட்டிபோட்டவள்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நானும் அவளும் ஒரே கல்லூரியில்தான் பயின்றோம்.எங்களுக்குள் முதலில் மோதல் பிறகு அனைத்து தமிழ் சினிமாவிலும் வருவது போல் அப்படி ஒரு தெய்வீக(?) காதல்.அவளை நான்
என் உயிரின் வடிவமாகப்பார்த்தேன்.என் உலகம் எப்போதுமே அழகுதான்... அது இன்னும் பேரழகானது அவளால்தான் என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா உங்களுக்கு?

நான் இன்றே புதியதாய் பிறந்தவனை உணர்ந்தேன்...காற்றிலே சிறகுகளின்றி மிதந்தேன்.என் நாட்கள் நொடிகளென கரைந்தது.இதுவரை நான் பார்த்த பல இடங்கள் எனக்கு மெருகூட்டப்பட்ட அழகுடன் காட்ச்சியாளித்தன...என்னவளின் அருகாமையால்.என் வாழ்வின் அர்த்தமே என் கண்முன்னே அவள் உருவம் கொண்டு வருவதாய் கற்பனை செய்தேன்.

இவையெல்லாம் எங்களது கல்வியை disturb செய்ய நாங்கள் அனுமதிக்காததின் பலன் எங்கள் இறுதியாண்டு campus தேர்வில் இருவரும் நல்ல நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்ததில் தெரிந்தது.அதன்பிறகு வாரம் இருமுறை பீச்களிலும்,பார்க்களிலும்,சினிமா தியேட்டேர்களிலும்,இன்னபிற இடங்களிலும் தொடர்ந்தன எங்கள் காதல்.

நாட்கள் கடந்தன.எங்கள் காதலை எங்கள் வீடுகளில் சொல்லும் நேரமும் வந்தது.
நான் என் வீட்டில் சம்மதம் வாங்கிவிட்டேன்...எனக்கு அது பெரிய வேலையாக இருக்காது என்பது முன்னமே தெரிந்த விஷயம்தான்.என் வீட்டில் சிறுவயதுமுதல் என் விருப்பத்திர்க்கே முன்னுரிமை.அவள் வீட்டில் எங்கள் ஜாதி வேற்றுமை பெரிதாய் தோன்றவே எங்கள் ஆத்மார்த்தமான காதலை நிராகரிக்க துணிந்தனர்.நாங்கள் எவ்வளவோ மன்றாடியும் நாங்கள் விரும்பிய வாழ்வமைத்துக்கொடுக்க அவர்கள் சம்மதிக்கவில்லை.

நாங்களும் எங்கள் முடிவில் உறுதியாய் இருந்தோம்.அனால் விதி அவள் அன்னையின் மூலம் சதி செய்தது.அவள் அன்னையின் தற்கொலை முயற்சி அவள் உறுதியை குலைத்தது.ஆம் அவர்கள் பார்த்து முடிவு செய்திருந்த அவர்கள் ஜாதி பையனுக்கே அவளை மனம்முடித்துவிட்டார்கள்.திருமணத்திற்கு நான்கு நாட்கள் முன்பு என்னிடம் அவள் வந்து 'என்னை மன்னித்துவிடு!நம் காதல் எனக்கு பெரிதுதான் ஆனால் அதைவிட என் அம்மா எனக்கு முக்கியம்.நீயும் இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்துகொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்' என்று கூறிவிட்டு சென்றாள்.என் நெஞ்சில் இடியை இறக்கியதுபோன்ற ஒரு உணர்வு.நீ இல்லாது ஒரு வாழ்வை நினைத்துப்பார்க்க இயலுமா என்னால்?உன்னை என் உயிர் என்றல்லவா கருதி இருந்தேன் இன்று என்னை மறந்து விடு என்கிறாய்.எப்படி மறப்பேன்?என் இதயம் துடிப்பதை நிறுத்தினாலும் உன்னை நினைப்பதை நிறுத்தாதே?என் வாழ்வு இனி உன்னோடு அல்ல என்பதை நீ கூறிவிட்டாய்...சரி உன் நினைவுகளோடுதான் நான் முடிவுசெய்துவிட்டேன்.

காலங்கள் உருண்டோடிவிட்டன.அதோ தூரத்தில் அவள் எதிரில் அவளேதான்.அவளை பார்க்கும் சக்தி என்னிடம் இல்லை.பார்த்தால் என் மனம் என்னவளை கண்டதுபோல் துள்ளிக்குதிக்கும்...வேண்டாம் நான் அவளை காணப்போவதில்லை.இன்று அவள் இன்னொருவனின் மனைவி.நான் எப்படியேனும் இந்த இடத்தைவிட்டு அகன்றாகவேண்டும்.அவள் வருவதர்க்குள்.அவள் இந்த பேருந்து நிலையத்துக்குத்தான் வருகிறாள்...அருகில் வந்துவிட்டாள்.அப்பாட!நான் போகவேண்டிய பேருந்து வந்தாயிற்று.நான் அந்த பேருந்தில் ஏறினேன்.என் மனம் மட்டும் அந்த பேருந்து நிலையத்திலேயே!!!

Monday, July 19, 2010

மதராசபட்டினம் பாடல்கள்

நான் இன்னும் மதராசபட்டினம் படம் பாக்காததால பாடல்களை மட்டும் பிரித்து மேயலாம்னு இருக்கேன்.(Mind voice-ஆமா படம் பாக்காதத எவ்ளோ அழகா சமாளிக்கிற?).

ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு படத்தோட எல்லா பாட்டும் பிடிச்சது இதுலதான்.("வாரணம் ஆயிரத்"துக்கு அப்புறம்).முதல்ல "மதராசபட்டினம்" டீமிற்கு வாழ்த்துக்கள்.இவ்ளோ அழகான படம் கொடுத்ததுக்கு.படம் பாக்கணும் போல ஒரு எண்ணத்தை விதைச்சதே பெரிய விஷயம்.இசைஅமைப்பாளர் g.v.பிரகாஷ்க்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.பாட்டு ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதத்துல நல்லா வந்திருக்கு.

1."மேகமே":-ஆஹா!சலவை செய்யறவங்களோட வாழ்க்கைய இந்த ஒரு பாட்டுல கண்முன்னாடி நிறுத்திட்டீங்க.பாடல் வரிகளும் அருமை.அவங்க வேலையெல்லாம் முடிச்சுட்டு மழை ரசிக்கும்போது நாமும் அவர்களோடு சேர்ந்து ஆடுவதுபோல் உணர்வு வருவது அழகு...!இயற்கை அன்னை நமக்கு எவ்வளவு அழகிய பரிசளித்திருக்கிறாள்?காட்சியமைப்பும் சூப்பர்.நாசர்,பாலா சிங் இருவருக்கும் போட்டி மாதிரி காமிக்கிறது(படம் பாக்காததனால ஏன்னு தெரியல),"குண்டு போடறாங்க"னு அப்பாவிய சொல்றது,வெள்ளைக்கார டிரஸ் போட்டு ஆர்யாவிடம் அடி வாங்குபவர் என நகைச்சுவையும் கலந்து இருக்கிறது.

2."வாம்மா துரையம்மா":-ஐயோ!பழைய மெட்ராஸ்!ஏக்கமா இருக்குதுங்கோ...!
ஹனிஃபாவின் கமெண்ட்,மொழிபெயர்ப்பு எல்லாம் சூப்பர் timing காமெடி.பாட்டிலே மெட்ராஸின் பெருமைகள சொல்லியிருக்காங்க.ஆஹா இந்த பாட்டை பாக்கும்போது சென்னைய நான் அதிகமா மிஸ் பண்றேன்.

3."பூக்கள் பூக்கும்":-இந்த பாட்டு ஆரம்பத்திலே ஆர்யா கொடுக்கும் expression, ஆர்யா நீங்க கலக்கிட்டீங்க போங்க.பாடல் வரிகள்,அந்த ஹம்மிங் எல்லாமே இந்த பாட்டை ஒரு superhit பாட்டாக்கிருச்சு.எடிட்டிங் சூப்பர் இந்த பாட்டுல படகுல ஒவ்வொரு angleஆ ம்யூசிக்குக்கு ஏத்தாமாதிரி அழகா எடிட் பண்ணி இருக்காங்க.

4."ஆருயிரே":-மெலடி பாடல்...வரிகளும் பிரமாதம்.இந்த பாட்டுல வர்ற கோட்டை (செட்டான்னு தெரியல) அந்தக்கால படங்கரத எடுத்து காட்டி இருக்கு.ஆனாலும் எங்கேயோ ஒரு மூலையிலே "ஓ...பிரியா பிரியா"(இதயத்தை திருடாதே) பாடல நினைவுப்படுத்துது.எமியோட வாயசைவு சூப்பர்.தெள்ளதெளிவா இருக்கு.தமிழ் heroines கவனியுங்கோ...!

5."காற்றிலே":-இதுதான் படத்தோட முக்கிய பாடலாம்.சுதந்திரத்தையும், காதலோட வலியையும் அழகா இணைச்சிருக்காங்க.மெட்டு first கிளாஸ்.நமக்கும் ஒரு உத்வேகம் இந்த பாடலை கேட்கும்போது வருது."காரிருள் நீங்கி...."அந்த ரிபீட் ஆகுற lines முணுமுணுக்க வைக்குது.

இப்போ என்னோட வாயிலே முனுமுனுக்கும் பாடல்கள் இந்த திரைப்படபாடல்கல்தான்.

Thursday, July 15, 2010

நான் ரசித்த திரைப்படங்கள்-II

1. காக்க காக்க:
கௌதம் மேனன்-சூர்யா-ஜோதிகா-ஹாரிஸ் ஜெயராஜ்-தாமரை சூப்பர் கூட்டணி.ஒரு நல்ல போலீஸ் படம்.சூர்யா ரொம்ப மெனக்கெட்டு ஒரு போலீஸ் எப்படி உடம்பை ஃபிட்டா வைச்சுக்கணுமோ அவ்ளோ கட்டுமஸ்த்தா வச்சுருப்பார்.சூர்யா-ஜோதிகா லவ் எபிசோடு ரொம்ப ரொமாண்டிக்கா லௌவப்லா இருந்தது.'ஒரு ஊரில்' பாடல் வரிகள் நிச்சயம் எல்லோரையும் கவர்ந்திருக்கும்.'உயிரின் உயிரே' பாடல் நிச்சயமா நிறைய பேரோட ரிங்க்டோனா இருந்திருக்கும்.கிளைமாக்ஸ் கொஞ்சம் மாத்தி இருக்கலாம்.ஒரு அழகான காதல் ஜோடிய பிரிச்சுட்டாங்களேன்னு வருத்தமா இருந்துச்சு.வன்முறையையும், கேட்ட வார்த்தைகளையும் கொஞ்சம் கம்மி பண்ணி இருக்கலாம்.ஆனால் படம் சூப்பர்.

2.அன்பே சிவம்:
கமலோட தரமான படம்.மாதவனும் இணைஞ்சிருக்கார்.இவங்க ரெண்டு பேருக்குள்ளேயும் இருக்குற வேற்றுமையை லாவகமா நகைச்சுவையா கையாண்டிருக்காங்க.கமலோட flashback தோற்றம் அழகா இருந்திச்சு.அவரோடய make-up நல்ல இருந்தது.கமல்ஹாசனுக்கு இதெல்லாம் ஒரு மேட்டேரா?கிரணுக்கும் நடிக்க கொஞ்சம் வாய்ப்பு இருக்கு.அதை ஓரளவுக்கு நல்லாவே பயன்படுத்தியிருக்காங்க.'பூ வாசம்' பாடல் அருமையான மெலடி.கிளைமாக்ஸ் மெசேஜ்தான் படத்தை தூக்கி நிறுத்துது.

3.உன்னை நினைத்து:
அழகான காதல் கதை.நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க.சூர்யா ஏமாறும் இடம் இப்படியெல்லாம்கூட எமாத்துராங்களான்னு நினைக்க தோணுது.ஆனா நிஜத்தில் இதைவிட மோசமான மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.சிநேகாவின் கதாபாத்திரம் நன்று.லைலா, ஒரு சராசரி பெண்ணை பிரதிபலிக்கிறார்.சினிமா கதாநாயகியானால் காதலுக்காக தூக்கி எரியும் விதியை மீறி நடித்திருக்கிறார்.'என்னை தாலாட்டும்' பாடல் வரிகள் நன்று.இதுவும் மெசேஜ் சொல்லும் படமே!

நான் ரசித்த திரைப்படங்கள்-I

வணக்கம்!இப்போ நான் ரசிச்ச சில படங்கள பத்தி இங்கே ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்.நானும் சின்ன வயசுலேர்ந்து சினிமா பார்த்தே வளர்ந்ததனாலே தமிழ் சினிமா மேல ஒரு அலாதி பிரியம்.அதனாலே லிஸ்ட் கொஞ்சம் பெரிசா இருக்கும்.இத ஒரு தொடர் மாதிரி part part-ஆ போடலாம்னு இருக்கேன்...

1.மௌன ராகம் :
இது மணிரத்தினம் படம்ட்ரதாலையே ஒரு ஈர்ப்பு வர்றது நிஜம்.ஒரு matured லவ் ஸ்டோரி.மோகன் பல படங்கள்ல மைக் பிடிச்சு பார்த்த நமக்கு இதுல வர்ற கேரக்டர் ரொம்ப புதுசு.அழகா அடக்கி வாசிச்சிருப்பார். ரேவதி அவங்க கதாபாத்திரத்தை உணர்ந்து நல்ல நடிச்சிருப்பாங்க.கார்த்திக் சொல்லவே வேண்டாம்.இந்த படத்துக்கப்புரம் அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே சேர்ந்திருக்கும்.'சந்திரமௌலி'ங்கிற பேரை கேட்டு யாராலாவது கார்த்திக்கை நினைக்காம இருக்க முடியுமா?கிளைமாக்ஸ்ம் நச்சுனு இருக்கும்.இளையராஜாவைப்பத்தி இங்கே சொல்லலேன்னா ஒரு கூட்டம் என்னை அடிக்கவே வந்துடும்.பாட்டெல்லாம் இப்போவும் கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல போட்ருக்கார்.அப்புறம் அந்த 'சர்தார்ஜி' காமெடி(ஹிந்தி சொல்லி கொடுக்கும் சீன்) யாராவது சிரிக்காம இருந்திருப்பாங்களா?

2.மௌனம் சம்மதம்:
நல்ல கிரைம் ஸ்டோரி.மம்மூட்டி அசத்தியிருப்பார்.'கல்யாண தேனிலா' பாட்டை மறக்க முடியுமா?எல்லா கதாபாத்திரங்களும் அழகா நடிச்சுருப்பாங்க.யார் கொலையாளின்னு கடைசி வரைக்கும் இருக்கும் suspenseதான் படத்தோட சுவாரஸ்யத்துக்கு முக்கிய காரணம்.திரைக்கதை சூப்பர்.

3.குருதிப்புனல்:
கமலோட அட்டகாசமான போலீஸ் படம்.என் favorite ஹீரோ அர்ஜுன் வேற சேர்ந்து நடிச்சுருக்கார்.இதவிட வேற காரணம் வேண்டுமா எனக்கு இந்த படம் பிடிக்க.ரெண்டு பேருமே இதுல ரொம்ப handsomeஆ இருப்பாங்க.எந்த compromiseம் பண்ணாமல் பாட்டு இல்லாம படம் எடுத்த தைரியத்துக்கே பாராட்டலாம்.

4.ஆஹா:
அருமையான குடும்ப கதை.ஒரு கூட்டுக்குடும்பத்தை நம் கண்முன்னே நிறுத்திய டைரக்டருக்கு பாராட்டுக்கள்.அதையும் சீரியஸா கொடுக்காம நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கும் விதத்துக்கே இந்த பட்டியலில் சேர்க்கலாம்னு தோணிச்சு.நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ், என் கண்ணுல தண்ணியே வந்துடும்போல இருந்தது.புதுமுகங்களை வச்சு அழகா ஒரு entertaining movie கொடுத்திருக்கார் டைரக்டர்.பானுப்ரியாவப்பத்தி சொல்லியே ஆகணும்.இந்த படம் எனக்கு பிடிக்க முக்கிய காரணம் அவங்கதான்.ஆஹா அந்த அந்தாக்ஷரில 'நின்னுகோரீ' பாட்டு பாடி 'அழகிய ரகுவரனே'ன்னு சொல்லி ஒரு வெட்கப்படுவாங்களே சூப்பர்.

5.அலைபாயுதே:
என் ஆல் டைம் பேவரிட் படம்னா அது இதுதான்.again மணிரத்தினம் சார்மிங் டைரக்டர்.romancela என்னமா பின்னி எடுக்கறார் மனுஷன்.மாதவனுக்கு ஒரு நல்ல opening.எனக்கு புடிச்ச ஹீரோயின் ஷாலினி நடிச்ச படம்.இந்த படத்துல நடிச்சதுக்கப்புரம் இவங்கள தமிழ் சினிமா மிஸ் பண்ணபோகுதுன்னு பேர் வாங்கினாங்க.அவ்ளோ சூப்பரா நடிச்சாங்க.பாட்டு....நம்ம ஆஸ்கார் ஹீரோ ஏ.ர்.ரஹ்மான்.கேட்கணுமா?5 பாட்டுமே செம ஹிட்.ஆனாலும் எனக்கு புடிச்சது 'எவனோ ஒருவன்'தான்.காதலோட,பிரிவோட வலிய அழகா காமிச்சு இருப்பாங்க.
ச்வர்ணலதாவோட குரல் பெரிய பிளஸ் பாயிண்ட்.மொத்தத்துல ரொம்ப நல்லா இருந்துச்சு.நான் theatre-ல ரெண்டு வாட்டி பார்த்தேன்.

(என் ரசிப்புத்தன்மை ஜாஸ்தியா இருக்கறதுனாலே தொடரும்....)

Monday, July 12, 2010

சொர்கமே என்றாலும்...!

இன்று பலரும் தன வீட்டை விட்டு வெளியூருக்கோ அல்லது வெளி நாட்டுக்கோ சென்று வேலை பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது.
ஏனெனில் இன்றைய பொருளாதார சூழல் அப்படி.விருப்பம் இல்லை எனினும் அவர்கள் அந்த சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.வேறு வழியின்றி செல்பவர்களை விட்டு விடலாம்,வேண்டுமென்றே வெளிநாடு செல்ல விருப்பபட்டு போகிறவர்களுக்காக இந்த பதிவு.

என்னதான் பணம் சம்பாதித்தாலும் நாம் நம் வீட்டில் இருப்பதுபோல் இருக்காது.நாம் ஒரு இடத்திலும் நம் குடும்பத்தார் இன்னொரு இடத்திலும் இருப்பது பெரிய தண்டனை.இதை நாம் தெரிந்தே விரும்பி ஏற்கிறோம்.நம் பெற்றோர் நாம் வரும் அந்த ஓரிரு நாட்களை எண்ணி ஏங்கி கொண்டிருப்பார்கள்.நம் அருகாமையைவிட பெரிய பரிசு அவர்களுக்கேது?இன்றைய ஃபாஸ்ட் புட் உலகத்தில் உள்ளூரில் இருந்தாலே நம் குடும்பத்தினரோடு நேரம் செலவழிப்பது கொஞ்சம் கடினம்.அதிலும் வெளிநாடென்றால்...?நம் பெற்றோரை நாமே அருகில் இருந்து கவனித்து கொள்ளவில்லைஎனில் வேறு எவரால் அதை சிறப்பாக செய்ய முடியும்?

நாம் திரும்பி வரும்போது பெரும் செல்வம் நம்மிடத்தில் என்ன...ஆனால் சின்ன சின்ன சந்தோஷங்களை இழந்திருப்போம்.ஒரு குழந்தையின் மழலை ஒரு சில வருடங்களுக்குதான்.அதை அனுபவிக்க ஒரு தந்தை குழந்தையின் அருகாமையில் இருக்க வேண்டும்.அந்த அருமையான வருடங்களை பணம் சம்பாதிப்பதில் செலவழித்துவிட்டு பிறகு என்ன பயன்?தாய் தந்தையர் உயிரோடு இருக்கும்போது அருகில் இருந்து aபார்த்துக்கொள்ளாமல் அவர்கள் உயிர் இழந்தபிறகு அழுதாலும் புலம்பிநாலும் என்ன பயன்?சிந்திப்பார்களா...?

நமக்கு ஜுரம் வந்தால் பாட்டி கஷாயம் போட்டுகொடுக்கும் சுகம்,'உடம்பை நல்ல பாத்துக்க கூடாதா?' என்கிற தாத்தாவின் அக்கறை,தலைவலி தைலம் தேய்த்துவிடும் அம்மாவின் அரவணைப்பு,'டாக்டர்கிட்ட போலாம் வா' என்று அழைத்து செல்லும் தந்தையின் பாசம்,...இப்படி ஒருவருக்கு உடம்பு சரிஇல்லை என்றாலும் குடும்பமே உருடுனையாய் நிற்கும் அன்பு அது கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும் கிட்டாத சுகம்.இதையெல்லாம் விட்டுவிட்டு
வெறும் printed papers-க்காக (அதான் பணம்) தவரவிடுகிறவர்களை என்னவென்று சொல்வது?

இங்கு உங்கள் வீட்டில் ராஜாவாக இருப்பதைவிட்டு, வெளிநாடுகளில்
அடிமையாக வாழ வேண்டுமா?சிந்தியுங்கள்....வாழ்க்கை வாழ்வதற்கே!

வசீகரா திரைப்படத்தில் விஜய் அழகாக சொல்வார்,'நான் வெளிநாடு சென்றால் கார் வாங்கி அதன் போட்டோவைத்தான் தந்தைக்கு அனுப்பி வைக்க முடியும்.ஆனால் உள்ளூரில் இருந்தால் மாட்டு வண்டியில் உடன் செல்ல முடியும்'.யோசிக்க வேண்டிய வார்த்தைகள்.

ஆகவே நண்பர்களே!இனியேனும் வெளிநாட்டு மோகத்தைவிட்டு
உங்கள் குடும்பத்தினருக்கு உங்கள் அருகாமையை பரிசளியுங்கள்.அதை விட ஒரு பரிசு உங்களால் உங்கள் குடும்பத்தினருக்கு கொடுக்க இயலாது!

ராவணன்-ஒரு பார்வை!

போன மாசம் 26-ஆம் aதேதி ஆல்பர்ட் theatre-ல kபார்த்தேன்.பதிவு போட late ஆயிடுச்சு.கதை எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். அதனால மறுபடி சொல்லி போர் அடிக்காம எனக்கு என்ன தோணிச்சோ அதை மட்டும் சொல்ல போறேன்.(Build up ஜாஸ்தியா இருக்குல.சரி நான் matterக்கு வரேன்) ராவணன்!எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு படம்.அதற்கு காரணம்
நிறைய சொல்லலாம்.விக்ரம்,ஐஸ்வர்யா ராய்,இன்னும் முக்கியமா மணிரத்தினம்,ரொம்ப நாளைக்கப்புறம் பிரபுவும் கார்த்திக்கும் சேர்ந்து நடிச்சது,ஆஸ்கார் அவார்ட் வாங்கின இசைஅமைப்பாளர் .ர்.ரஹ்மான்,...அத எல்லாம் பூர்த்தி செஞ்சுதாணு எனக்கு இன்னும் ஒரு டவுட் இருக்கு.எனக்கு படம் பிடிச்சிருந்தது.பட் நிறைய minus இருந்தது.படத்தோட பிளஸ்:விக்ரம்,ஐஷ்,songs,கிளைமாக்ஸ் fight,bridge செட்,location,minus:romance missing,ப்ரித்விராஜ் கேரக்டர்,ஹிந்தி ஸ்டைல் (ப்ரியாமணி) marriage செட்,கார்த்திக்-ன்ற ஒரு நல்ல actor-ஐ வீணடித்திருப்பது .

ஒபெனிங்
சீன்-ஏ சூப்பர்.விக்ரம் மலையில் இருந்து குதிக்குறத பார்க்கும் போது ஒரு பரபரப்பு நம்மையும் தொத்திக்குது.ஆனால் மணிரத்தினம் படத்தில எப்போவும் இருக்கும் ஒரு ஸ்பெஷல் romance இதுல missing.சேசிங் scenes கொஞ்சம் dryயாத்தான் போவுது.விறுவிறுப்பு missing.ஆனால் இது எல்லாத்தையும் அந்த climax fight (பாலம் செட் சூப்பர்) மறக்க வச்சிடுது.
விக்ரம் மேல ஐஷ் எந்த ஒரு காதலும் காட்ரமாதிரி எனக்கு தோணல.அது ஒரு மனுஷனுக்கு நடந்த அநியாயத்துக்கு காட்ற கருணை,பரிதாபம்,அவ்வளவுதான்னு எனக்கு தோணிச்சு.விக்ரம் மேல இருக்குற குற்றம் என்னன்னு தெளிவா காமிக்கல.அத காமிச்சுருந்தா இன்னும் effect இருந்திருக்கும்னு நான் நம்பறேன்.கிளைமாக்ஸ் song நல்லா இருக்கு lyricsம் சரி,locationம் சரி மணி மணிதான்னு prove பண்ணிட்டார்.ஆனால் sir, நீங்க romantic films தமிழ் style-ல எடுத்தா உங்களுக்கு நிகர் நீங்க தான்.ஹிந்தி style-ல தமிழ் படம் கொடுக்காதீங்க sir.
ராவணன்!location,song,மணிரத்னத்துக்காக பார்க்கலாம்!

Friday, June 25, 2010

நட்பே நட்பே...!

பெண்களின் நட்பு....எவ்வளவு உணர்வுபூர்வமாக இருந்தாலும், ஆழமாக பழகினாலும் ஒரு நிலைக்கு மேல் தொடர இயலாமல் போவது பெரும் சோகம்.
ஆம்.. திருமணங்களின் மூலம் கருகி போகும் அவர்களின் நட்பை பற்றி இங்கே கூற வேண்டும் என தோன்றியது.

எனக்கு தெரிந்த இரு தோழிகளை பற்றி கூறுகிறேன்.
பிரியா ,ஜான்ஸி என இரு தோழிகள்.ஒரு ஆழமான நட்பு அவர்களுக்குள் துளிர்விட்டது.அவர்களது நட்பின் ஆழம் மிகப்பெரியது. தினமும் போனில் அரட்டை, தான் உண்ட உணவிலிருந்து கண்ட கனவு வரை அனைத்தையும் பகிர்ந்துகொண்டனர்.சினிமா,ஷாப்பிங் இப்படி எங்கு செல்வதாயினும் இருவரும் ஒன்றாகவே செல்வர் .அப்படி இருந்த நட்பிற்கு ஒரு நாள் வந்தது சோதனை.
ஜான்சியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்தனர்,திருமணமும் நிச்சயித்தாகிவட்டது.மாப்பிள்ளை நல்ல வேளையில் ஒரு பிரபலமான நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார்,அதுவும் ஜான்சியின் கனவு நிறுவனத்தில்.ஜான்சியின் மீதும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.அவள் மகிழ்ச்சிக்கு அளவேது? இப்போது ப்ரியாவிற்கு புரிந்து விட்டது நாம் பிரிய போகிறோம் என்று.இருப்பினும் தன் தோழி மிகவும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து மனதை தேற்றி கொண்டாள்.ஜான்சியும் நாம் எப்போதும் போல் பேசுவோம், சந்திப்போம் என கூறியதை எல்லாம் நம்பாமல் நம்பினாள். திருமணமும் நன்றாக நிகழ்ந்தது. பிரியா திருமணத்தின் முதல் நாளே வந்து இறுதி வரை இருந்து தோழியை புகுந்த வீட்டிற்க்கு வழி அனுப்பிவிட்டுதான் சென்றாள்.திருமணம் ஆன புதிதில் வாரம் ஒரு முறை பேசிக்கொண்டிருந்தவர்கள் இருவரும் நாள் கணக்கில் பேசாமல் இருந்தனர்.சூழ்நிலைதான் காரணம்.ஆயினும் இருவருக்குள் இருந்த பாசப்பிணைப்பு அறுபடதொடங்கியது.இருவருக்குள்ளும் இருந்த நெருக்கம் காணாமல் போனது.நாட்கள் மாதங்களானது,மாதங்கள் வருடங்களானது.இருவரும் பிறந்த நாள்,திருமண நாள் வாழ்த்து கூறுவதோடு சரி.அதுவும் வெறும் இரண்டு மூன்று வருடங்களுக்குத்தான்.பின் அதுவும் இல்லாமல் போனது.

இப்படி தான் பல பெண்களின் நட்பு திருமணத்திற்கு பிறகு உடைபட்டு போகிறது.
என்னதான் ஆழமாக பழகி இருந்தாலும் தனக்கென்று ஒரு குடும்பம், ஒரு புதிய சூழல்,பொறுப்புகள் வரும்போது எல்லாம் காற்றிலே கலைந்து போகும் மேகமென மாறிப்போவது இயற்கை.

பெண்களே!உங்கள் பொறுப்புகளையும் நிறைவேற்றி உங்கள் நட்பையும் தொடரலாமே.எத்தனையோ பெண்கள் பல துறைகளில் சாதிக்கிறார்கள்.பெண்களுக்குத்தான் பல விஷயங்களை ஒரே நேரத்தில் செய்யும் திறன் உள்ளதாம்.உங்கள் துன்பத்தில் உடன் இருந்து கை கொடுத்து ஆறுதல் சொல்லி,உங்கள் இன்பத்தை இரட்டிப்பாக்கிய நட்பை என்றும் மறக்காதீர்கள்.
ஆண்களே!உங்கள் மனைவியும் உங்களை போல ஒரு மனித பிறவி.பிறரோடு நட்பு கொள்ளாமல் யாராலும் வாழ இயலாது.ஆகையால் அவர்களின் நட்பு தொடர நீங்களும் உங்களால் இயன்ற உதவிகளை செய்யலாமே.
சிந்தியுங்கள்....!

Thursday, June 24, 2010

அர்த்தமுள்ள பாடல் வரிகள்

பாடல்:மன்னிப்பாயா
படம்:விண்ணை தாண்டி வருவாயா
பாடியவர்கள்:ஏ.ஆர்.ரஹ்மான்,ஸ்ரேயா கோஷல்
இசை:ஏ.ஆர்.ரஹ்மான்

பெண்:கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள்தான்
துடித்திருந்தேன் தரையினிலே திரும்பிவிட்டேன் என் கடலிடமே
ஒரு நாள் சிரித்தேன் மறுநாள் வெறுத்தேன்
உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா...
ஆண்: கண்ணே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழை ஆகிபோனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே...
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உன்னை நோக்கியே எனை ஈர்க்கிராயே...
மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை
என்ன செய்வேன் ஓஒ உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்..(ஒரு நாள்...)
பெண்:ஓடும் நீரில் ஓர் அலை தான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன் மன்னிப்பாயா அன்பே
ஆண்:காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே (ஒரு நாள்...)

chorus: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கண்ணீர் பூசல் தரும்,

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்றும் உரியர் பிறர்க்கு ,

புலம்பல் என சென்றேன் புல்லினேன்
நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு

பெண்:ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயோ கானல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவென்னும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம் (ஒரு நாள் ....)

Thursday, February 25, 2010

நேசிக்க துவங்குங்கள்!



காதல் ஒரு அழகான வார்த்தை!காதல்னா ஒரு ஆண் ஒரு பெண் மேலையோ இல்ல ஒரு பெண் ஆண் மேலையோ காட்ற அன்பு மட்டும் இல்ல.நான் இங்கே சொல்ல போற காதலே வேற.காதல்ன்ற வார்த்தைக்கு அர்த்தமே ஆழமான விருப்பம்,அதீத அன்புதான்.பிள்ளைகள் பெற்றோர் மீது காட்டும் அன்பு,பெற்றோர் பிள்ளைகள் மீது காட்டும் பரிவு,அக்கறை,குடும்பதினருக்குள்ள இருக்கிற பாசம்,ஒற்றுமை,இவ்வளவு ஏன் ஒரு மனுஷன் சக மனுஷன் மேல காட்டுற மனிதாபிமானம்,நாம இயற்கையை ரசிக்கிறது எல்லாமே காதல்தான்.காதல் இல்லனா வாழ்க்கை போர் அடிச்சிடும்.நாம செய்யுற வேலையகூட காதலிச்சு செஞ்சாதான் சிறப்ப செய்ய முடியும்.

நமக்காக ஒருத்தர் இருக்காங்க,நமக்கு என்ன பிரச்சினை வந்தாலும் சமாளிச்சிடலாம்ன்ற நம்பிக்கை கொடுக்கிறதுதான் தான் காதல்.அதனால எல்லாரும் காதலியுங்கள்,உங்கள் குடும்பத்தை,சுற்றத்தை,நட்பை,சக மனிதர்களை, கடவுள் நமக்கு வரமாக தந்த இயற்கையை.அன்பை கொடுத்து அன்பை பெரும் சுகம் சொல்லில் அடங்காது.அனுபவித்து பாருங்கள்!இந்த உலகத்தை, உங்கள் வாழ்க்கையை நேசியுங்கள்!


Thursday, February 18, 2010

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்!


எல்லாருக்கும் வணக்கம்!நம்மோட மனச எப்படி எல்லாம் சந்தோஷமா வச்சிக்கலாம்னு சொல்ல போறேன். நம்மோட வாழ்க்கை முறை எவ்வளவோ மாறிடுச்சு அதனால நிறைய டென்ஷன், கோபம் எல்லாம் அதிகமாயிடுச்சு.நம்ம வீட்ல இருக்கறவங்ககூட பேசக்கூட டைம் இல்ல.இந்த சூழல்ல நாம நம்மள ரெப்ரெஷ் பண்ணிக்கிறது ரொம்ப அவசியம்.எப்படி?நிறைய வழிகள் இருக்கு.நமக்கு புடிச்ச சினிமாவுக்கு போகலாம்,கோவிலுக்கு,பார்க்,பீச் இப்படி நமக்கு பிடிச்ச வெளி இடங்களுக்கு அடிக்கடி போயிட்டு வரலாம்.வீட்ல இருக்குற நேரத்துலயும் டிவிலே மூழ்கிடாம குடும்பத்தினரோட சேர்ந்து பேசலாம்,கருத்துக்கள பறிமாறிகொள்ளலாம்.அப்பப்போ சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிட்டு வரலாம்.யார் மேலயாவது கோபம் வந்தால் அவங்க செஞ்ச தப்ப நினைக்காம அவங்க நமக்கு முன்னாள் செஞ்ச நல்லதை எல்லாம் நினைச்சு பார்க்கணும்.இது பல பிரிவினைகள் அதனால வர்ற பிரச்சினை எல்லாம் தீர்க்கும்.ஏதோ சூழ்நிலை நமக்கு நெருக்கமானவங்களைகூட தப்பா நினைக்கவச்சிடும்.அதுக்கெல்லாம் நாம இடம் கொடுக்க கூடாது.சும்மா இருக்கற நேரத்தை உங்க மனசுக்கு பிடிச்ச விஷயங்கள செய்ய யூஸ் பண்ணலாம்.சிலருக்கு வரைய பிடிக்கும்,சிலர் சமையல் கலையில் ஆர்வமா இருப்பாங்க, இப்படி நம் மனச ரிலாக்ஸ் பண்ற எந்த விஷயத்தையும் தயங்காம அதுக்கும் டைம் ஒதுக்கி செய்யலாம். மனுஷங்களுக்காக கொஞ்ச நேரம் ஒதுக்க பழகிக்கணும்.அதுதான் உண்மையான சந்தோஷத்த கொடுக்கும்.பணம்,பதவி எல்லாம் பறந்து போய்டும்.பழகின மனுஷங்கதான் நம்மோட இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி கை கொடுப்பாங்க.அதனால, சந்தோஷமா நிம்மதியோட எல்லாரோடவும் சேர்ந்து வாழ்க்கையை ரசிக்க கற்றுக்கொள்வோம்!வாழ்க்கை வாழ்வதற்கே!எல்லோரையும் வாழ்த்தி நாமும் நலமுடன் வாழ்வோம்.


தமிழ் படம் விமர்சனம்!


எல்லாருக்கும் வணக்கம்!"தமிழ் படம்" நிறைய பேர் பார்த்திருப்பீங்க. ரொம்ப நாளைக்கப்புறம் நான் விழுந்து விழுந்து சிரிச்ச படம்.கதை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். திரும்ப சொல்லி போர் அடிக்க மாட்டேன்.அந்த பரதநாட்டிய சீன யாரும் மிஸ் பண்ணிடாதீங்க.மனுஷன் என்னமா ஆடியிருக்காரு?(பௌலிங் போட்டு இருக்காரு) .ஆஹா என்ன முகபாவனைகள்?கலக்கிட்டீங்க சிவா கிரேட்!டைரக்டர் க்கு பெரிய பாராட்டு பத்திரமே வாசிக்கலாம். ஒவ்வொரு சீனயுமே சொல்லணும், அத்தனை பேரோட குடும்ப பாட்டு இருக்குற CD ஆகட்டும்,பாடல்களுக்கு சிவா கொடுக்குற expressions ஆகட்டும் ,coffee வர்றதுக்குள்ள சிவா crorepati ஆகரதாகட்டும் ஐயோ சூப்பர் !எந்திரத்தனமான வாழ்க்கைக்கு நடுவுல இப்படியும் படம் பாத்தாதான் நம்மால் பிரெஷா இருக்க முடியும். Good Trial !Congrats to தமிழ் படம் team! இத எல்லாரும் நகைச்சுவை உணர்வோட மட்டும் பார்த்தால் நிச்சயம் enjoy பண்ணலாம்.புது முயற்சிய பாராட்டலாமே!


Wednesday, February 17, 2010

இன்பம் நம் மனதில்


நம் அனைவருக்கும் வாழ்வில் துன்பம் வருவது இயற்கை.சிலர் தமக்கு நேரும் துன்பம் போல் உலகில் வேறு எவருக்கும் வருவதில்லை என புலம்புவதை நாம் கேள்விபட்டிருபோம். உண்மையாகவே சிலருக்கு அடுக்கடுக்கான பிரச்சினைகள் வருவதுண்டு.இதை நாம் நம் மனதை பக்குவபடுத்தும் நிகழ்வாக எடுத்து கொள்ளலாம்.துன்பம் இல்லை என்றால் இன்பத்தின் அருமையை நாம் எவ்வாறு அறியமுடியும்?கடவுள் நமக்கு துன்பங்கள் கொடுக்கிறார் என்றால் அவர் நமக்கு உதவி செய்ய தயாராக உள்ளார் என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.நம்மால் மட்டுமே இத்தகைய துன்பங்களை எதிர் கொள்ள முடியுமென்று நம்புகிறார்.வாழ்க்கை நாம் நினைப்பது போல் போட்டி அல்ல வெற்றி பெறுவதற்கும், தோல்வி அடைவதற்கும்; வாழ்க்கை ஒரு வரம் நாம் வாழ்ந்து பார்க்க,இயற்கையை ரசிக்க,வியக்க,....இன்பம் வரும்போது சந்தோஷமாக ஏற்றுகொள்ளும் நாம் துன்பத்தில் மட்டும் புலம்புவது எந்த விதத்திலும் சரி ஆகாது.இரண்டையுமே சமமாக பார்க்க பழகி கொள்ள வேண்டும்.இன்பமோ துன்பமோ இரண்டுமே நம் மனதில் மட்டுமே இருக்கிறது.சுற்றுசூழல் இன்பமாக இருந்தாலும் நம் மனதில் நிம்மதி இல்லாமல் நாம் சந்தோஷமாக இருக்க இயலாது.நம்
மனதை பூவனம்போல் வைத்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.அதற்கான சில வழிமுறைகளை என் அடுத்த வலைப்பூவில் சொல்கிறேன்.

அதுவரை உங்கள் வாழ்வில் குளிர் தென்றல் வீசட்டும்...


Related Posts with Thumbnails